எஸ். சினீஸ் கான்
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேசமானது நீண்டகால
அரசியல் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். இலங்கையில் 1947 இல் சோல்பரி யாப்பின் கீழ் முதன் முதலில் நடத்தப்பட்ட பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இருந்து இற்றைவரை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக பெற்று வருகிறது.
- ஆரம்ப காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு.
ஆரம்ப காலத்தில் கிண்ணியாவைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசியக் கட்சி போன்ற தேசிய கட்சிகளின் செல்வாக்கே மிகைத்திருந்தது. இக்கட்சிகளின் ஊடாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிலும் இவ்விரு கட்சிகளுமே மாறி மாறி ஆதிக்கம் செலுத்திவந்தன.
கிண்ணியா அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால வாக்கு வங்கியானது 1 சத வீதத்தை விட குறைந்த நிலையிலேயே காணப்பட்டது. ஸ்தாபக தலைவர் எம்.எஸ்.எம். அஷ்ரஃப் கூட கிண்ணியாவில் கட்சியை வளர்ப்பது என்பது சவாலாகவே காணப்பட்டது என்பது வரலாற்றில் பேசப்படுகிறது.
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் எம்.எஸ் தௌபீக் எம்.பி யின் அரசியல் வருகை.
இந்நிலையில் 2000 ஆம் ஆண்டு நடைபெற இருந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் திருமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட இருந்த எம்.எல் பைத்துல்லாஹ் அவர்களின் அகால மரணத்தைத் தொடர்ந்து அவரது எம்.எஸ் தௌபீக் பதிலீட்டு வேட்பாளராக போட்டியிட்ட வேண்டிய சந்தர்ப்பம் இவருக்கு கிடைத்ததுடன் அவர் வெற்றியும் பெற்றார்.
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு தௌபீக் எம்.பியின் பங்களிப்புப்
இவரது அரசியல் வருகை கிண்ணியாவின் மக்கள் மத்தியில் புதியதொரு மாற்றத்தையும் புத்தெளிச்சையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
கட்சியை வளர்ப்பதற்கு தௌபீக் எம்.பி யினால் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் வீடு வீடு சென்று அங்கத்தவர்களை சேர்த்ததுடன் வீட்டுக்கு வீடு மரம் எனும் திட்டமும் செயற்படுத்தப்பட்டது. இத்துடன் கட்சியின் வளர்ச்சிக்கு தௌபீக் எம்.பி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் இதற்கு பிரதான காரணமாகும்.
கிண்ணியா அரசியல் அரசியல் வரலாற்றில் கிண்ணியாவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உச்ச வளர்ச்சிக்கு கொண்டு சென்ற பெருமை எம்.எஸ் தௌபீக்கையே சாரும் என்பதை வரலாறு சொல்கிறது.