பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (30-08-2019) கடைபிடிக்கப்பட்டது.பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
சர்வதேச தினம் இன்று (30-08-2019) கடைபிடிக்கப்பட்டது.
பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோடு, இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கடைபிடித்து வருகின்றனர்.
இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர்.இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் கடந்த 10 வருடங்களில் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், இன்று வரை காணாமல் போனோர் தொடர்பான எந்தவித தகவல்களும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் திறப்புஇலங்கையில் காணாமல் போனோரை கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
காணாமல் போனோரையும், காணாமல் ஆக்கப்பட்டோரையும் தேடி கண்டுபிடித்தல் மற்றும் அவர்கள் காணாமல் போனதற்கான சூழ்நிலையை கண்டறிதல் ஆகியன இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.
இந்த நிலையில், குறித்த அலுவலகம் திறக்கப்பட்டு, வடக்கில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை பகுதியிலும் ஓர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோரை கண்டறிவதற்கான பல முயற்சிகள் இந்த நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (நான்றி பிபிஸி)