ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண பெயரை மாற்றிவிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு தாமரை மொட்டுக் கட்சி
தனது இணக்கத்தைத் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு நேற்று (04) மாலை விஷேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் நடாத்திச் செல்லப்படும் lankaleadnews.com இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு அமைய, கூட்டணியின் பெயரை மாற்றுவதற்கும், தாமரை மொட்டுக்கு பதிலாக கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷ தற்போது தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதால் சட்டரீதியான தடைகள் காணப்படுவதால் இது தொடர்பில் தேர்தல் சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.