இன்று முதல் ஊரடங்கு சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக இன்று முதல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளாவான மக்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத வகையில் வீதிகளில் நடமாடுவதை காணக்கூடியதாக இருந்ததாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார். எனினும் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தி கொரோனா வைரஸை நாட்டில் இருந்து ஒழிப்பதே பிரதான நோக்கமாகும். எனினும் இவ்வாறு அசம்பந்த போக்குடன் மக்கள் செயற்படுவதால் தனிமைப்படுத்தல் சட்டத்தை பொலிஸார் கடுமையாக நடைமுறைப்படுத்த உள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
இதற்கான ஒத்துழைப்பை பொலிஸாருக்கு முப்படையினர் வழங்க உள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இருவருக்கிடையில் பேண வேண்டிய இடைவெளி தொடர்பிலும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக வீதிகளில் இறங்க வேண்டாமெனவும் வீடுகளுக்குள் இருந்து சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறும் ஆலோசணை வழங்கப்பட்டுள்ளது.
இவையனைத்தையும் மதிக்காது செயற்பட்டமையால் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நீரில் அடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வைத்தியர்களின் ஆலோசணைக்கமைய தங்களது வீடுகளிலிருந்து சுய தனிமைப்படுத்தலை முன்னெடுத்து அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு அரசாங்கத்திற்கு சரியான ஒத்துழைப்பை வழங்கினால் குறுகிய காலத்தில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸை நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு முடியுமென கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.