1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சிக்கலில் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம்:இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையை கொரோனா வைரஸின் காரணமாக பிரான்ஸ் எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டின் நிதி அமைச்சர் புருனோ லு மைர் தெரிவித்துள்ளார்.

2020இல் பிரான்சின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது அது கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலால், 2009ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போது ஏற்பட்ட -2.2 வீழ்ச்சியை விடவும் மோசமான நிலையை அடையும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈக்குவேடாரில் நிலவும் பரிதாப நிலை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உலக நாடுகள் திணறி வரும் நிலையில், ஈக்வேடார் நாடு கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடமில்லாமல் தவித்து வருகிறது.

தென் அமெரிக்க கண்டத்தில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக ஈக்வேடார் உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான குவயாகீலில், நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

இதுகுறித்த செய்தியை விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: ஈக்குவேடாரில் உயிரிழந்தவர்களின் உடல்களை அட்டைப் பெட்டியில் அடக்கம் செய்யும் பரிதாப நிலை

கொரோனா வைரஸின் இசை வடிவம் தயார்

கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்று நீங்கள் புகைப்படங்களில், காணொளிகளில் பார்த்திருக்கலாம். ஆனால், முதல் முறையாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் கட்டமைப்பை இசை வடிவமாக மாற்றியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் இந்த இசை வடிவம், இந்த நோய்த்தொற்று குறித்து நுண்ணோக்கி மூலம் விஞ்ஞானிகளால் காண முடியாததை விளக்கும் என்று அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸின் தொற்றுத் தன்மைக்கு காரணமான அதன் புரதங்களின் கட்டமைப்பு குறித்து அறிவதற்காக தங்களது குழுவினர் ஏற்கனவே இந்த இசை வடிவத்தை பயன்படுத்தி அதன் அதிர்வு கட்டமைப்பை பகுப்பாய்வு செய்துள்ளதாக பேராசிரியர் மார்க்கஸ் கூறுகிறார்.

“கொரோனா வைரஸின் அதிர்வு கட்டமைப்பை புரிந்துகொள்வது, இந்த நோய்த்தொற்று எதிரான மருந்துகளை உருவாக்குவதற்கு மிகவும் பயன்படும்.”

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் இதுவரை உயிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து தமிழகம் வரும் மருத்துவ கருவிகள்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை உடனடியாக சோதித்து முடிவுகளைத் தெரிவிக்கும் 'கிட்'களை சீனாவிலிருந்து தமிழ்நாடு வாங்கவிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஒரு லட்சம் கிட்கள் வரும் 9ஆம் தேதி தமிழகத்திற்கு வருமென்றும் அவர் கூறியிருக்கிறார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி அழைப்பு மூலம் ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அரசு மருத்துவமனைகளுக்கென 2,500 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கான ஆணையும் பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: 'ரேபிட் டெஸ்ட் கிட்'களை சீனாவிடமிருந்து வாங்குகிறது தமிழகம்

கொரோனா வைரஸ்: உலகளவில் உயிரிழப்பு 70 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உலகிலேயே அதிகபட்சமாக இத்தாலியில் 14,887 பேரும் ஸ்பெயினில் 13,055 பேரும் பிரான்சில் 8,088 பேரும் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,86,409ஆக உள்ளது அதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 3,37,933 பேரும் ஸ்பெயினில் 135,032 பேரும் இத்தாலியில் 1,28,948 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயத்தில் உலகம் முழுவதும் 2,76,098 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளனர் என்று அந்த தரவுத்தளம் கூறுகிறது.

இந்தியாவுக்கு மூன்று மில்லியன் டாலர்கள் நிதியுதவி - அமெரிக்க அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸூக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அறிவித்துள்ளது.

இந்த நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு யு.எஸ்.ஐ.ஐ.டி., நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் பிற அமெரிக்க அரசு துறைகள் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறினார்.

"கோவிட் -19 நோய்த்தொற்று உலகளாவிய பொது சுகாதார அச்சுறுத்தலாகும். இதை உலக நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும்" என்று ஜஸ்டர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சிக்கான அமைப்பு (யு.எஸ்.ஐ.ஐ.டி.) மற்றும் இந்தியாவில் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் அறிவித்துள்ளார்.

ஸ்பெயினில் தொடர்ந்து குறையும் உயிரிழப்புகள்

ஸ்பெயினில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஸ்பெயினில் இன்று (திங்கட்கிழமை) கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக 637 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது நேற்று 674ஆக இருந்தது. இதன் மூலம் மார்ச் 24 முதலான கடந்த இரண்டு வார காலத்தில் ஸ்பெயினில் பதிவாகும் குறைந்தபட்ச உயிரிழப்பாக இது உள்ளது.

இருப்பினும், இன்று (திங்கட்கிழமை) ஸ்பெயினில் மேலும் 4,273 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் உலகிலேயே இரண்டாவது அதிகபட்ச உயிரிழப்புகளை கண்டுள்ள ஸ்பெயினில் அந்த நோய்த்தொற்றின் தாக்கம் உச்சநிலையை அடைந்துவிட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் நம்புகின்றனர்.

 “இத்தாலி, ஸ்பெயின் நம்பிக்கையளிக்கிறது” - அமெரிக்கா

கொரோனா வைரஸால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக அந்த நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, அமெரிக்காவின் "எதிர்காலம் என்னவாக இருக்கும்" என்பதில் "நம்பிக்கையைத் தருகிறது" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசகர்களில் ஒருவரான டெபோரா பிர்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மையமாக விளங்கும் நியூயார்க் நகரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நோய்த்தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

“பல வாரங்களுக்கு முன்னர் நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் வரும் வாரத்தில் கட்டுக்குள் வரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று டெபோரா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இதுவரை 337,274 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9,619 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை மையத்தை அடித்து நொறுக்கிய மக்கள்

மேற்கு ஆஃப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், தங்கள் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தின் வாயிலாக தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் மக்கள் அதை அடித்து நொறுக்கினர்.

இன்னும் கட்டுமானத்தில் உள்ள அந்த பரிசோதனை மைய கட்டடத்தை அடித்து நொறுக்கும் காணொளியில், “எங்களுக்கு இது வேண்டாம்” என்று மக்கள் கூறுவதைப் போன்று காட்சிகள் உள்ளன.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்த நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், அந்த இடத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திட்டம் எதுவும் இல்லை என்றும் அது பரிசோதனை மேற்கொள்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஐவரி கோஸ்ட்டில் இதுவரை 260 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸால் முதல் மருத்துவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆப்கானிஸ்தானில் முதல் முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதை பிபிசியிடம் அந்த நாட்டின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

காபூலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்த அந்த மருத்துவரின் உடன் பணிபுரியும் 20 பேருக்கு தற்போது கோவிட்-19 நோய்த்தொற்று பரவியுள்ளதா என்பதை கண்டறிய அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இதுவரை 367 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இரானுடனான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஹேரத் மாகாணம் இந்த நோய்த்தொற்று தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான், போரினால் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, பலவீனமான பொது சுகாதார அமைப்பைக் கொண்டுள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராட தங்கள் நாட்டுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காவிட்டால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சிங்கப்பூர் - கொரோனா நிலை

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 120 புதிய கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு பணியார்கள் தங்கியிருந்த இரண்டு முகாம்கள், புதிய கொரோனா தொற்றுக்கான மையமாக இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சுமார் 20,000 வெளிநாட்டு பணியாளர்கள் தங்களுடைய முகாம்களில் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள நாட்களில், அந்த பணியாளர்களுக்கான ஊதியம், உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை அளிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்கள் சிலர், தங்கள் அறைகளில் கழிவறை நிரம்பி வழிவதாகவும், உணவுக்கு வரிசையில் நிற்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது வரை சிங்கப்பூரில் 1300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்: கனிகா கபூர் குணமடைந்தார்

கனிகா கபூர்

உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கனிகா கபூரின் 6-வது ரத்த சோதனை முடிவு நெகட்டிவ்வாக வந்ததையடுத்து அவர் வீடி திரும்பினார்.

மார்ச் 19ஆம் தேதி பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மார்ச் மாதம் லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய அவருக்கு நிலையத்தில் அவருக்கு தெர்மல் ஸ்கீரினிங் செய்தபோது கோவிட் -19 இருப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.

அதனைத் தொடர்ந்து அவர் இரண்டு மூன்று பெரிய அளவிலான பார்டிகளில் கலந்து கொண்டார். அதில் பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ஆனால், மார்ச் இரண்டாம் வாரத்தில் னிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது.

கனிகா கலந்துகொண்ட விருந்தில் ராஜஸ்தான் எம்.பி துஷ்யந்தும் கலந்து கொண்டார். இவர் பின்னர் நாடாளுமன்ற கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல், இவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடுத்த விருந்திலும் கலந்து கொண்டுள்ளார்.

ராம்நாத் அந்த விருந்தில் கலந்து கொண்டவர்களுடன் கை குலுக்கவில்லை என்றாலும், அவருக்கும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கனிகா கபூருக்கு 4 முறை ரத்த சோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்றை உறுதி செய்யும் விதத்தில் பாசிட்டிவ் என சோதனை முடிவுகள் வெளிவந்தது.

இதனிடையே 5-வது மற்றும் 6-வது சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை(நெகட்டிவ்) என்று ஆய்வு முடிவுகள் வந்ததையடுத்து கனிகா கபூர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இந்தியாவின் நிலை?

இந்தியாவில் இன்று (திங்கட்கிழமை) காலை நிலவரப்படி 3666 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. 109 பேர் மரணம் அடைந்துள்ளன, 291 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 45 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் பெண் புலிக்கு கொரோனா:

பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல்

வெளவாலிடமிருந்து மனிதனுக்கு பரவியதாக சந்தேக்கிக்கப்படும் கொரோனா இப்போது மனிதனிடமிருந்து விலங்குக்குப் பரவி உள்ளது. உலகத்தில் மனிதனிடமிருந்து விலங்குக்கு வைரஸ் பரவுவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது 13 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,444 ஆக உள்ளது. அதே நேரம் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து இருந்து வருகிறது. அந்நாட்டில் சுமார் 3 லட்சத்து 37 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரும், இத்தாலியில் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஜான்சனுக்கு கொரோனா இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவனைக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டார் என அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் தினந்தோறும் புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவனை சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் முதல்முறையாக குறைந்துள்ளதாக அம்மாகாண மேயர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர நேற்று முன் தினத்தைவிட, நேற்றைய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது வரை நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 4.159 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள உயிரியல் பூங்காவில் இருக்கும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவின் பராமரிப்பாளர் ஒருவரிடம் இருந்து, புலிக்கு கொரோனா பரவியுள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பெண் புலிக்கு மட்டுமல்லாமல், அதே பூங்காவில் இருக்கும் சில ஆப்ரிக்க சிங்கங்களும் வறட்டு இருமலால் அவதிப்படுவதாகவும், கூடிய விரைவில் அனைத்து விலங்குகளும் குணமடைவார்கள் எனவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவுவது அரிதாகவே நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது வரை 5,700-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மூன்று லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஆஸ்திரேலிய அரசு, மக்கள் தொகை விகிதாச்சாரப்படி உலகிலேயே மிக அதிகம் என தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவ முக்கிய காரணமாக கூறப்படும் ரூபி பிரின்சஸ் சொகுசுக்கப்பல், பல நாள் காத்திருப்பிற்கு பின் சிட்னி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் பயணித்தவர்களில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானில் விரைவில் அவரச நிலை?

ஜப்பானில் விரைவில் அவரச நிலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானிய ஊடகங்கள் அளித்த தகவலின்படி, வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையிலும் உறுதிப்படுத்தப்படாத எண்ணிக்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று அவசர நிலை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இன்றே எந்த அறிவிப்பும் அமல்படுத்தப்படாது என்றும் கருதப்படுகிறது.

டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற பெரிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜப்பான் நாடு முழுவதும் பரவலாக ஒரே விதமான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைப் போல ஜப்பான் பிரதமரால் நாட்டை முடக்கும் நடவடிக்கையை அமல்படுத்த முடியாது. இதுவரை ஜப்பானில் 3600 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், 85 பேர் உயிரிழந்துள்ளனர். டோக்கியோவில் மட்டுமே 1000திற்கு அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் நிலவரம் என்ன?

இஸ்ரேல் நாட்டில் ஏராளமான கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள தீவிர பழமைவாத யூத நகரம் ஒன்றில் தற்போது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவ் நகரத்துக்கு வெளியே உள்ள நே பிரேக் நகரில் அவசியத் தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். சில இன்றியமையாத பணியாளர்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

2 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் 40 சதவீதம் பேருக்கு கொரோனா இருப்பதாக மூத்த சுகாதாரத் துறை அதிகாரி கூறுகிறார்.

இதுகுறித்து விரிவாக படிக்க:இஸ்ரேலில் ஒரே நகரத்தில் 40% பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

C குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு விலங்குகள்

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கி போய் உள்ளது. யாரும் வீட்டு வாசலுக்குக் கூட வருவதில்லை. ஆள் அரவமற்ற வீதிக்குக் காட்டு விலங்குகள் வர தொடங்கி உள்ளன. ஆம். மனிதர்களின் உலகுக்குள் காட்டு விலங்குகள் நுழைந்துள்ளன.

இஸ்ரேல் நாட்டில் ஏராளமான கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள தீவிர பழமைவாத யூத நகரம் ஒன்றில் தற்போது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி