கொரோனா வைரஸ் பரவலால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களின்போது, பெருந்தோட்ட மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழில்கள் குறித்து அரசாங்கம் பேசினாலும், அங்கு வாழும் மக்கள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Manthiri.lk இணையதளத்தின் ஏற்பாட்டில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற நேரடி அரசியல் நிகழ்ச்சியில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அண்மையில் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய போதிலும், அவருக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்று கூறினார்.
மலைநாட்டில் மாத்திரமன்றி, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பெருந்தோட்டத் துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் திட்டங்கள் குறித்து அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் மனோ, ஒரு கண்காட்சியைப் போல் வெறுமனே பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டால், அத்தகைய கலந்துரையாடல்களில் பங்கேற்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு எதிர்கொள்ளும் பேரழிவு சூழ்நிலையிலிருந்து நாட்டை காப்பாற்ற அரசு, சுகாதாரத் துறை, இராணுவம் மற்றும் பொலிஸாரின் சேவையை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பாராட்டியுள்ளார்.