எலிக் காய்ச்சல் காரணமாக கொழும்பு கடற்படை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரியொருவர் இறந்துள்ளார்.
கடற்படை தலைமையகத்தில் கடமையாற்றுபவரும், கலெந்பிந்துனுவெவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவருமான லெப்டினன்ட் கமாண்டர் (தொண்டர்) சுனில் பண்டார தொடம்வல என்ற அதிகாரியே இவ்வாறு இறந்துள்ளார். இவர் சபரகமுவ பல்கலைக் கழகத்தின் பட்டதாரியாவார்.
35 வயதுடைய இந்த அதிகாரி கடந்த 18ம் திகதி கொழும்பு கடற்படை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக கடற்படை கூறுகிறது. இவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லையென செய்திகள் கூறுகின்றன. என்றாலும், இவருக்கு எலிக்காய்ச்சல் தொற்றியிருப்பதை கண்டறியும் போது அவரது சிறுநீரகங்கள் இரண்டும் பழுதடைந்துள்ளமை தெறிய வந்துள்ளது.
Covid-19 காரணமாக இவர் இறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட போதிலும், வெலிசர கடற்படை முகாமின் தற்போதைய நிலைமையின்படி, Covid-19 காரணமாக மரணிப்பவர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் முறைக்கேற்ப இந்த கடற்படை அதிகாரியின் இறுதிச் சடங்கையும் நிறைவேற்ற வேண்டுமென ராகம சட்ட வைத்திய அதிகாரி பரிந்துரைத்துள்ளதாக கடற்படை கூறுகிறது.
அதன்படி கடற்படை மரியாதையுடன் இவரது இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்படவுள்ளது.