(எஸ்.ஆர்.லெம்பேட்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்
எமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. அவரைப் பொறுத்தவரையில் எங்களிடத்தில் நல்லெண்ணமே உள்ளது. ஆனால் அவருடன் சேர்ந்துள்ள கூட்டம் இந்த நாட்டிலே அநியாயத்தை செய்கின்ற,கொடூரமாக செயல்படுகின்ற ஜனாஸாக்களை எரிப்பதற்கு உத்தரவிட்ட அந்த ஜனாதிபதியுடன் கைகோர்த்து உள்ளவர்கள் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.
இதனாலேயே நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் முசலியில் நேற்று திங்கட்கிழமை (19) மாலை இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆதரவு தெரிவித்த நிலையில் முதல் முதலாக இந்தக் கிராமத்துக்கு வருகை தந்து பேசக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலில் நாங்கள் ஏமாந்து விடாது புத்தி சாதுரியமாக எமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இன்றைய காலகட்டத்தில் நாங்கள் மிக நிதானமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் நான்கு வேட்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது.
அவர்களின் நாங்கள் மூன்று வேட்பாளர்களை நிராகரித்து விட்டு, ஒருவரை மாத்திரம் ஏன் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நீங்கள் சிந்திக்கலாம். இந்த நாட்டிலே எதிர் காலத்தில் இனவாதம் இருக்க கூடாது என்று ஆசைப்படுகிறோம். ஜனாஸாக்களை எரிக்கின்ற கேடு கெட்ட ஜனாதிபதி இந்த நாட்டிலே மீண்டும் வந்து விடக் கூடாது என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.
இவ்வாறு ஜனாஸாக்களை எரிகின்ற போது கைகட்டி பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் ,அமைச்சரவையில் இருந்தவர்கள், அதற்குப் பக்கபலமாக இருந்தவர்கள்,144 உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தை வென்ற ஜனாதிபதி கோட்டபாயவுக்கு 20 ஆவது திருத்தச் சட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக எமது சமூகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
எமது சமூகத்தை அழிக்க கை உயர்த்திய அந்தக் கூட்டத்தினர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
இந்த நாட்டிலே ஒரு காலத்தில் ஆயுத கலாசாரத்தை தூது விட்டவர்கள், தற்போது ஜனநாயகத்தை பேசுகின்றவர்கள், அவர்கள் இன்று எந்த மார்க்கத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை.அவர்கள் நாஸ்திக கொள்கையைக் கொண்டவர்கள்.
இவ்வாறானவர்களுடன் இணைந்து நாங்கள் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கொடுக்க முடியுமா என சிந்திக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.