மித்தெனிய தெபொக்காவ
பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறையை சுத்தம் செய்யாத காரணத்தினால் 12 வயதுடைய மாணவன் ஒருவரை தாக்கியதாகவும் இதனால் மாணவனின் கழுத்தில் இரண்டு எலும்புகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அவரது தாயார் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார் என ஹம்பாந்தோட்டை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
வகுப்பறையைச் சுத்தம் செய்யாமைக்காக இவ்வாறு மாணவன் ஒருவனை அதிபர் அடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும் என மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மாணவனுக்கு எந்தவித பாதிப்பு அறிகுறியும் இல்லை என்றும், மாணவன் கடும் மன அழுத்தத்துக்கு மட்டுமே உள்ளாகியிருப்பதாக தடயவியல் மருத்துவர் அளித்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்தச் சம்பவத்தில் பொலிஸாரும் பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும் அம்பாந்தோட்டை மனித உரிமைகள் நிலையத்தின் இணைப்பாளர் தரங்கா எல். பட்டபெத்தி மேலும் கூறினார்.
இதேவேளை, அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான தனது மகன் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.