ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடும் சுமார் இருபது வேட்பாளர்கள் தமக்கு பாதுகாவலர்கள் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
பாதுகாப்பு கோரிய ஏனைய வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி வேட்பாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிடம் நாம் வினவிய போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் கூட்டங்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.