இந்த ஆண்டு ஜனாதிபதித்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 19 பேர் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவகத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒரு கூட்டத்தைக் கூட நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்குச் சீட்டு அச்சிட தேர்தல்கள் ஆணைக்குழு கோடிக்கண்கான ரூபாவை செலவிடுகிறது.
இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமை சிக்கலான நிலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களில் ஒருவர் சமீபத்தில மரணித்துள்ளார். இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் 10 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் நல்ல நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பெரிதாக இதுவரை இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.