பொலிஸ் காவலில் தனிநபர்கள்
சித்ரவதை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் பொலிஸார் அதனைத் தவிர்ப்பதில் எவ்வித முன்னேற்றம் இல்லாதது குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதி எஸ்.துரைராஜா தலைமையிலான மூவரடங்கிய உயர. நீதிமன்ற நீதிபதிகள் குழாம் திறந்த நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவோ அல்லது பொலிஸ் மா அதிபரோ உயர் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்படி அதிகாரிகளால் எவ்வித அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அதில் பல்வேறு உத்தரவுகள், எச்சரிக்கைகள் மற்றும் கைதிகள் தவறாக நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன என்றும் நீதிபதி துரைராஜா மேலும் சுட்டிக்காட்டினார்.
இரண்டு மாணவ செயற்பாட்டாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின்போதே உயர. நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இதனைத் தெரிவித்தது.
2009 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களால் உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் அவமானப்படுத்தப்பட்டதாக இந்த மாணவ செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.