விசாவின் செல்லுபடியாகும் காலம்
முடிந்து நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவரை பியகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்வான – வல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசிக்கும் 35 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர், தன்னைத் திருமணம் செய்யவுள்ள இந்தியப் பிரஜையால் பிரச்சினை மற்றும் துன்புறுத்தல்கள் ஏற்படுவதாக செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.
இதன்போது, இந்திய பிரஜையின் விசாவின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரும் சுமார் ஒன்றரை வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வந்துள்ளனர், அங்கு இருவரும் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். இந்நிலையில், இலங்கைப் பெண் நாடு திரும்பியதையடுத்து, குறித்த இந்திய ஆணும் ஜூன் 20ஆம் திகதி இலங்கை தங்கியிருந்தார்.
குறித்த இந்திய பிரஜைக்கு அன்றைய தினம் முதல் 30 நாட்கள் வீசா கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் கடந்த ஜூலை 15ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரையில் அவர் விசா நீடிப்பை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கைது செய்யப்பட்ட இந்தியர் மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.