(நூருல் ஹுதா உமர்)
ஐக்கிய மக்கள் கூட்டணியின்
ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் அமோக வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள கல்முனை தேர்தல் தொகுதியின் தேர்தல் நடவடிக்கை செயற்குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் மருதமுனை தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவின் கல்முனை தொகுதியில் வெற்றியை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள், பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் மற்றும் உச்ச பீட உறுப்பினர் பதவியை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸுக்கு மீள வழங்க இன்று கூடிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று மருதமுனை தனியார் விடுதியில் இடம்பெற்ற உச்சபீட கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் மற்றும் உச்ச பீட உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் இடைநிறுத்தப்பட்ட விடயம் மற்றும் அவரால் வழங்கப்பட்ட பதில் கடிதம் என்பன ஆராயப்பட்ட பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.