ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று மாலை (28) மருதமுனை தனியார் விடுதியில் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் உயர் பீட அங்கத்துவத்தை இடைநிறுத்தி அனுப்பப்பட்ட கடிதத்துக்கு அவர் சத்தியக்கடதாசி மூலமாக தனது பதிலை தலைவருக்கு அனுப்பிய விவகாரம் ஆராயப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், மிகத் தெளிவாக கூறியுள்ள விடயம் யாதெனில் தான் 2024.08.04 ஆம் திகதி கூடி உச்ச பீடம் எடுத்த முடிவுடன் முற்று முழுதாக இருப்பதாகவும் தனக்கு இது தொடர்பில் எந்த மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெளிவாக தெரிவித்துள்ளார்.
தனக்கு ஆரம்ப இரண்டு வாரங்களாக சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டங்களுக்கு வர முடியாமல் போனதற்கு காரணம் தனது சுகவீனம் என்றும் அதை நிரூபிப்பதற்கு உரிய வைத்திய அத்தாட்சிப்பத்திரம் இணைத்து அனுப்பியுள்ளார்.
மேலும் அதற்குப் பிற்பாடு நடத்தப்பட்ட சஜித் பிரேமதாசவுக்கான சகல பிரசாரக் கூட்டங்களுக்கும் தொடர்ச்சியாக கலந்து கொண்டிருந்தார்.
இதனடிப்படையில் அவரால் அனுப்பப்பட்ட சத்திய கடுதாசியை ஆராய்ந்த உயர் பீடம், ஹரிஸின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு எதிரான அங்கத்துவத்தை இடைநிறுத்தும் தீர்மானத்தை நீக்கிக் கொண்டது என நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.