ஐக்கிய தேசியக் கட்சியின்
பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாலித ரங்கே பண்டாரவை நீக்குவது தொடர்பான கடிதத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (29) கையொப்பமிட்டுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுச் செயலாளர் பதவி தொடர்பான கடமைகளை பாலித ரங்கே பண்டார உரிய முறையில் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்சித் தலைமை உரிய தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய தலதா அத்துகோரளவை நியமிக்குமாறு, கட்சியின் பெரும்பான்மையான முக்கியஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
எனினும், இதுவரை தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை எடுக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவிடம் வினவியபோது, அது தொடர்பில் இதுவரையில் தமக்கு எவ்வித அறிவித்தல்களும் வரவில்லை என அவர் தெரிவித்தார்.