எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (01) இடம்பெற்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் இன்றைய கூட்டத்தில் அரியநேத்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், தமது கட்சியைச் சேர்ந்த அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அதிலிருந்து விலக வேண்டும் என்றும், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஆகிய மூன்று தீர்மானங்களை தமிழரசுக் கட்சி நிறைவேற்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதுவரை எமது கட்சி தீர்மானம் எதனையும் அறிவிக்காமையால் கட்சி உறுப்பினர்கள் பலவாறாக செயற்பட்டனர் எனவும் தற்போது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதால் கட்சி உறுப்பினர்கள் அதற்கேற்ப செயற்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சி எடுத்துள்ள குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் கூட்டங்களில் ஆராயப்படும் என்றும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.