அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு
மரியாதை மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைந்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும், அமைச்சர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம், மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் செலுத்துவது என்பன இரத்துச் செய்யப்படும் என பண்டாரவளையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.
அமைச்சர்களின் பின்னால் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்வது ஒழிக்கப்படும் எனவும், அச்சுறுத்தல் ஏற்பட்டால் மாத்திரம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், அச்சுறுத்தல் இல்லாவிட்டால் அமைச்சரின் கதவை திறக்க பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளை கவனிப்பதை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதன்பின்னர் நாட்டின் மீது ஆசை கொண்டவர்களே அரசியலுக்கு வருவார்கள் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்