அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது
திருத்தத்தை முழுமையாக நடைமு றைப்படுத்துவதாகவே சஜித் பிரேமதாஸ வாக்குறுதியளித்துள்ளார் என சிறிதரனின் கேள்விக்கு மனோ கணேசன் பதிலளித்துள்ளதற்கு சஜித்துடன் உள்ள ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் முஸ்லிம் சமூகத்துக்கு தெளிவான பதில் சொல்ல வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்திருப்பதாவது,
13ஐ முழுமையாக அமுல்படுத்துவது என்பது வடக்கு கிழக்கு முஸ்லிம்களை மட்டுமல்ல கொழும்பு முஸ்லிம்களையும் பேரினவாதங்களுக்கு அடிமையாக்கும் செயலாகும்.
13ன் படி காணி, மற்றும் பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் 1987 முதல் 90 வரை முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வரலாறே மீண்டும் வரும்.
காணி அதிகாரம் மாகாண சபைக்கு இல்லாத இன்றைய சூழலிலும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பல காணிகள் அரச அதிகாரிகளினால் பறிக்கப்பட்டு வருகின்றன.
புலிகள் காலத்தில் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் இன்று வரை மீள கையளிக்கப்படவில்லை.
அதே போல் கிழக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் அந்தப்பொலிசாருக்கு பசித்தால் முஸ்லிம்களையே சாப்பிடுவர்.
இதை நாம் கற்பனையாக கூறவில்லை. இவ்வாறு 1989ல் கிழக்கு மாகாண சபைக்கு பொலிஸார் தமிழ் தேசிய ராணுவம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட போது காரைதீவு சந்தியில் வைத்து சக தமிழ் தேசிய ராணுவத்தால் கிழக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட்ட பொலிசாரில் தமிழ் பொலிசாரை பிரித்து விட்டு நாற்பது முஸ்லிம் பொலிசாரை சுட்டுக்கொன்றது நினைவில்லையா?
இதன் போது உயிர் தப்பிய ஒரேயொரு பொலிஸ் உத்தியோகத்தர் இப்போது சாய்ந்தமருது பொலிசில் கடமையாற்றுகிறார்.
ஆகவே 13ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக தமிழ் கூட்டமைப்பிடம் சஜித் பிரேமதாச வாக்குறுதி அளித்துள்ளதாக மனோ கணேசன் சொல்வது உண்மையா என்பது பற்றிய தெளிவை ஹக்கீமும் ரிசாதும் சொல்ல வேண்டும்.