கட்டுநாயக்க விமான நிலைய
குடிவரவு முனையத்தில் காத்திருந்த இந்திய பிரஜை ஒருவர் தனது காற்சட்டைப் பையில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய இந்தியப் பிரஜை எனவும், அவர் கடந்த 6ஆம் திகதி வர்த்தகப் பயணியாக சென்னையில் இருந்து இந்நாட்டுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (07) பெங்களூர் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 கிலோ 158 கிராம் நிறையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் மேலும் 3 தங்க பிஸ்கட்டுகளும் சந்தேக நபரின் பொக்கற்றின் சிறிய பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடமிருந்த தங்க பிஸ்கட்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.