தபால் நிலையங்களை விற்பனை
செய்வது தற்போதைய ஜனாதிபதியின் பொழுதுபோக்காக உள்ளது. நுவரெலியா தபால் நிலையத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார். 21 ஆம் திகதி வெற்றியோடு நான் நுவரெலியாவுக்கு வருவது தபால் நிலையத்தை விற்பனை செய்ய அல்ல. லயன் அறைகளில் அடைக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களையும், தொழில் வாய்ப்பில்லாத இளைஞர்களையும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கே நான் வருவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்தோடு இந்த ஜனாதிபதியே அவரின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். அநுரகுமாரவின் பிரத்தியேகச் செயலாளராவதற்கு அவர் விருப்பப்படுகின்றார். தற்போது ஜனாதிபதியும் அநுரகுமாரவும் ஒன்றாக இணைந்து என்னை தோல்வியடைய செய்வதற்காக பணத்தை செலவிடுகின்றார்கள். யார் எதைச் செய்தாலும் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 39 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நுவரெலியா தலவாக்கலை நகரில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
200 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்த தோட்டத் தொழிலாளர்கள் வியர்வை சிந்தி, கண்ணீர் வடித்து, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்குகின்ற ஒத்துழைப்பை மறக்க முடியாது. இந்த பக்கபலம் குறித்து நாம் பெருமைப்பட்டு அவர்களுக்கு நன்றி கூறி கௌரவ படுத்துகின்றோம். அத்தோடு இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களை சமமான முறையில் ஏற்றுக் கொள்கின்றோம். தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் ரீதியான தகுதியான பிரதிநிதித்துவத்தை வழங்குவதோடு, காணிக்கான, வீட்டுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதி பூண்டு, லயன் அறைகளுக்கு பதிலாக தனியான குடியிருப்பு கிராமங்களை அமைத்துக் கொடுப்பதற்கான அடித்தளத்தை இடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.