உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட நஷ்டஈடான 75 மில்லியன் ரூபாவை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அந்த தொகையை செலுத்தினார்.
குறித்த முழுத் தொகையையும் 8 தடவைகளில் இவர் செலுத்தியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபா நட்டஈட்டு கொடுப்பனவை ஆகஸ்ட் 16ஆம் திகதியுடன் முழுமையாக செலுத்தியிருந்தார்.
இது தவிர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோரும் உரிய நட்டஈட்டை செலுத்தியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாதுகாப்புப் படைத் தலைவரும் போதிய உளவுத்துறை தகவலைப் பெற்றிருந்தும் ஈஸ்டர் ஞாயிறு தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதாவது 12 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் ரூபாவும் முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிரவுக்கு 75 மில்லியன் ரூபாவும் செலுத்த உத்தரவிடப்பட்டது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தனக்கு இதுவரையில் நட்டஈடு செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.