நாட்டின் தமிழ், முஸ்லிம்
இளைஞர்களுக்கு சிறந்த நாளை உருவாக்க முடியும் என நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்க்ஷ..
''ஒவ்வொரு அரசியல்வாதியும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கும் அரசியல் வாக்குறுதிகளை என்னால் வழங்க முடியாது. மாறாக இந்நாட்டு தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு சிறந்த நாளை என்னால் உருவாக்க முடியும்; அதற்கான தேவை நமக்கு இருக்கிறது. தேர்தல் நேரத்தில், நாடுகளுக்கு இடையே பிளவுகள் அதிகரிக்கும்.
சில அரசியல்வாதிகள் இனம், மதம், கட்சிகள் என பிரிவினைகளை ஏற்படுத்தி அரசியல் செய்கிறார்கள் ஆனால் நான் பிரிவினை அரசியல் செய்யும் அரசியல்வாதி அல்ல. இன்று கொழும்பில் இருந்து கிழக்குக்கு கொண்டு வரப்படும் அரசியல்வாதிகளை விடுத்து தமது மாகாணத்தில் இருந்து அரசியல் தலைவர்களை உருவாக்க மக்கள் திரள வேண்டும். அதற்கு நான் உதவுவேன்.
அதிவேக நெடுஞ்சாலையை மட்டக்களப்புக்கு கொண்டுவரும் திட்டம் எமக்கு இருந்தது . நல்லாட்சி அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்தியது. நாம் அமைக்கும் அரசாங்கத்தில் மட்டக்களப்பு வரை மத்தள அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும். குறிப்பாக, மட்டக்களப்பு, அறுகம்பே, திருகோணமலை முதல் பாசிக்குடா வரையிலான சுற்றுலாத் துறையை மத்தள விமான நிலையத்துடன் இணைப்பதன் மூலம் அபிவிருத்தி செய்யப்படும்.
தமிழ் கலாசாரத்தை காக்க வேண்டும். நான் இஸ்லாமிய கலாசாரத்தை பாதுகாக்க விரும்புகிறேன். பௌத்த கலாசாரத்தால் உருவாக்கப்பட்ட நாடு என்ற வகையில் ஏனைய கலாசாரங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
நாங்கள் கடினமான காலத்தை கடந்து வந்துள்ளோம். அன்று இனங்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது. தேர்தலின் போது அந்த பிரிவினை அதிகப்படுத்துகிறது என்றார்.