அக்கரபத்தனை பொலிஸ்
பிரிவுக்கு உட்பட்ட என்போல்ட் தோட்டப் பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சிசுவொன்றின் சடலமொன்று கடந்த திங்கட்கிழமை (09) இரவு மீட்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் , 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை, முச்சக்கர வண்டி சாரதி மற்றும் 24 வயதுடைய பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த விசாரணையில் சந்தேக நபரான சாரதிக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட உறவின் காரணமாக மாவனெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக குறித்த பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் பணிபுரியும் தனது சகோதரியின் உதவியுடன் சிசுவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு சடலத்தை மறைப்பதற்காக முச்சக்கரவண்டி சாரதியுடன் அக்கரபத்தனை பிரதேசத்துக்கு வந்ததாக சந்தேக நபரான பெண் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.