மிதிகம பொலிஸ் பிரிவுக்கு
உட்பட்ட கொவியாபான பிரதேசத்தில் உள்ள மீன் கடையொன்றில் வைத்து ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
38 வயதான கெலும் சதுரங்க என்ற மீன் வியாபாரி ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலையின் பின்னணியில் வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் உள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மீன் வாங்க வந்த மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
38 வயது மற்றும் 72 வயதுடைய இருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2022.08.04 இல் அஹங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொவியாபான சயுருமா ஹோட்டலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த விஜேசேகர கமாச்சிகே அமில சந்தருவானின் சகோதரர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், மிதிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.