சிஐடி அதிகாரிகள் என்று கூறி ஒரு குழு தங்கள் வீடுகளுக்குள் நுழைந்து தங்களது 13, 16 மற்றும் 11 வயது பிள்ளைகளை தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்று மணிக்கணக்கில் விசாரணை நடாத்தியுள்ளதாக கூறி கொழும்பு 15 பகுதியில் வசிக்கும் ஒரு குழுவினர் மூன்று அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தங்களது பிள்ளைகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி மூன்று சிறார்களின் பெற்றோர்களான ஜைனத்துல் ஜுஹைரியா, முகமது ரிஃப்கான் மற்றும் ஹபீஸ் முகமது நியாஸ் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மூன்று மனுக்களில் பிரதிவாதிகளாக பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி இயக்குநர், எஸ்.எஸ்.பி.திலகரத்ன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையால் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு பணம் கொடுக்க முடியவில்லை என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இருப்பினும் உதவித்தொகையின் கீழ் தங்களது குழந்தைகளை மதரசாக்களுக்கு படிக்க அனுப்பியதாக அவர்கள் கூறினர்.
ஏப்ரல் 24 மற்றும் 26 ஆம் திகதிளில், சிஐடி என கூறப்படும் அதிகாரிகள் குழு, தங்கள் வீடுகளுக்கு வந்து தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு புகைப்படத்தைக் காட்டி இவரை தெரியுமா என்று அதட்டினர். தங்கள் பிள்ளைகளுக்கு மதரசாக்களில் ஆயுதபயிற்சி வழக்கப்படுகிறதா என்று கேட்டனர் மத்ரசாக்களில் ஆயுதப் பயிற்சி வழங்கப்படவில்லை என்றும், தங்கள் பிள்ளைகளுக்கு படத்தில் உள்ள நபரைத் தெரியாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இந்த அதிகாரிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் கூறப்பட்ட போதிலும், தங்களுக்கு தெரியாமல் தங்கள் பிள்ளைகளை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அவர்களை தடுத்து வைத்திருக்கும் சரியான இடம் தங்கள் பிள்ளைகளுக்குத் தெரியாது என்று மனுதாரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
(lankaviews.com)