பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (3) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய மட்ட குற்றங்கள், மோசடிகள் மற்றும் முக்கியமான குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்காக இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதற்காக இணைந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது எவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன, எவ்வாறான விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, அவை நிறுத்தப்படுவதற்கு அரசியல் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அநாவசியமாக பிற்போடப்பட்ட விசாரணைகள் குறித்தும், புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டிய விசாரணைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
விசாரணைகள் தாமதமானால் அது என்னவாக இருக்கும் என்பது குறித்தும் கலந்தாலோசித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பல முக்கிய விசாரணைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கலந்துரையாடல் தொடர்பான விடயங்கள் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.