துபாயில் தாக்குதலுக்கு உள்ளாகி
இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவர் நேற்று முன்தினம் (3) உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பி.டி. விமுக்தி குமா ( 36) வஸ்கடுவ, பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
துபாயில் இருந்தபோது, இரு நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவரால் தாக்கப்பட்டு கோமா நிலைக்குத் தள்ளப்பட்டவர், கடந்த 28ஆம் திகதி துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
நீர்கொழும்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் பணிப்புரையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மல்கம் பேஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.