நாட்டில் நிலவும் மோசமான
காலநிலை காரணமாக நேற்று (11) இரவு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழையாக 175.5 மில்லி மீற்றர் அவிசாவளை எல்ஸ்டன் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இன்று (12) காலை 9.30 மணியளவில் களனி கங்கை நாகலகம் தெரு மற்றும் ஹங்வெல்ல நீர் மானிகளில் சிறு வெள்ளம் காணப்படுவதனை சுட்டிக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளது.
கொலன்னாவ, வெல்லம்பிட்டிய, களனிமுல்ல, அம்பத்தளை, கல்வான, மல்வான ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் கடுவெல மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கடுவெல இடைமாற்றுப் பகுதியின் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
களனி கங்கையின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ள நிலையில், ஹங்வெல்ல நீர்மானியின் நீர்மட்டமும் 8.8 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் மெஹகம, கொடபரகொடெல்ல, சிவலிவத்த, ஜயவீரகொட, வலவ்வத்த, வனஹகொட, எரியகொல்ல போன்ற பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை இடம்பெயர் முகாம்களுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது தவிர களுகங்கை மில்லகந்த பிரதேசத்திலும் பத்தேகம பகுதியில் கிங் கங்கையிலும் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. களுத்துறை பண்டாரகம பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியது.
புலத்சிங்கள மற்றும் பரகொட பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இவ்வருடம் மட்டும் 17ஆவது தடவையாக வெள்ளத்தினால் தமது பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குகுலே கங்கை நீர்த்தேக்கத் திட்டத்தினால் தான் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர.