ஜனநாயக தேசிய கூட்டணியின்
தலைவரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரச ஊழியர் ஒருவரை அறைந்ததாக கூறும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.
“பா. உ என்றால் அரச உத்தியோகத்தரை கன்னத்தில் அறையலாமா?”, “ஊழல் செய்த யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அரச ஊழியரை அறைந்துள்ளார்” போன்ற பதிவுகளுடனேயே இக் காணொளி பகிரப்பட்டு வருகின்றது.
இது குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.
இக் காணொளியை google reverse image search மூலம் ஆராய்ந்ததில் இது இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் வருட் நகரில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காணொளி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இக் காணொளி “ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதனா” சங்கத்தின் இளைஞர் பிரிவுத் தலைவர் மயூர் போர்டே என்பவர் மஹாராஷ்டிரா வங்கியின் கிளை தலைவரை அறைந்த காணொளி என்பதை கண்டறிய முடிந்தது. இது குறித்த செய்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி ” The Indian express” செய்தி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆகவே, ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரச ஊழியர் ஒருவரை அறைந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளியில் இருப்பது அங்கஜன் இராமநாதன் அல்ல என்பதையும், இது உண்மையில் ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதனா சங்கத்தின் இளைஞர் பிரிவுத் தலைவர் மயூர் போர்டே என்பவர் மஹாராஷ்டிரா வங்கியின் கிளை தலைவரை அறைந்த காணொளி என்பதையும் Factseeker உறுதிப்படுத்துகின்றது.
செய்தி இணைப்பு