Airline Ratings Institute நிறுவனம்
(AirlineRatings.com) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை ஏழிலிருந்து ஆறு நட்சத்திரங்களாக தரமிறக்கியுள்ளது.
செப்டம்பர் 21 ஆம் திகதி அன்று சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 607 விமானத்தின் விமானி அறை பூட்டப்பட்டதை மிகவும் பாரதூரமான சம்பவம் என்றும் இந்த நிறுவனம் விபரிக்கிறது.
இது தொடர்பில் இலங்கை விசாரணைகளை மேற்கொண்டுள்ள போதிலும், இந்தச் சம்பவத்தின் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
AirlineRatings.com அதன் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
ஏவியேஷன் ஹெரால்ட் (AV) நிறுவன அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட விமானி தனது துணை விமானியை விமானியின் அறைக்குள் திரும்ப விடாமல் தடுத்தார், மேலும் விமானம் கொழும்பில் தரையிறங்கிய பின்னர், விமானி மற்றும் துணை விமானிக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்தச. சம்பவத்துக்கு காரணம் என்று முறைப்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, UL 607 விமானத்தின் விமானி அறையை பூட்டியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த விமானி சேவையில் இருந்து இராஜினாமா செய்த போதிலும், அவருக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்காது, அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் சுயாதீனமாக மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இரண்டு விசாரணைகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸால் நடத்தப்படும் என்றும் மற்றுமொரு விசாரணை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையால் நடத்தப்படும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பொதுத் தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.