1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உங்களுக்கான பலப்பரீட்சை, இந்த நாட்டை நடத்திச் செல்லக்கூடிய ஒருவரை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம்

உங்களை நாடிவருகின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நாசகார செயல்களை செய்யும் கொலைகார கூட்டத்திற்கு சரியான பதிலடியை மக்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு - மண்முனை, தாந்தாமலை, மாவடி முன்மாரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 269ஆவது, 270ஆவது வீடமைப்பு திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் முதற்கட்டமாக இந்த மாத இறுதிக்குள் 2500 வீடுகளை கட்டி முடிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். எமது நிறுவனத்திற்குள் காணப்படுகின்ற மிகவும் திறமையான அதிகாரிகள் அதனை ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்பதாகவே 2500 வீடுகளை ஆரம்பித்து முடித்துவிட்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

2025ஆம் ஆண்டிற்குள் 20000வீட்டுத் திட்டங்களை உருவாக்கி இந்நாட்டிலே வீடுகள் இல்லாது தவிக்கின்ற ஏழைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதியளிக்கின்றேன். இந்நாட்டிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற காட்டுமிராண்டித்தனங்கள், அத்துமீறல்கள் ஏழைகளின்பால் தொடுக்கப்பட்டிருக்கின்ற பிழையான செயற்பாடுகளை நாங்கள் கண்டறிந்தோம்.

இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பதாதைகளை கிழித்தெறிந்திருக்கின்றார்கள். என்னுடைய புகைப்படத்தைக்கூட கிழித்திருக்கின்றார்கள்.நாங்கள் வந்தால் தேசிய பாதுகாப்பைத் தருவோம் என்கின்றார்கள். நாட்டைப் பாதுபாப்பதாக கூறுபவர்கள் செய்கின்ற வேலைகள் உங்களுக்குப் புரிகின்றதா? இந்தப் பகுதிக்கு வந்து நேற்று நள்ளிரவில் இதனை செய்திருக்கின்றார்கள்.

Sajith Premadasa Batticalo

எனது முகத்தினை நீங்கள் கிழித்தெறியலாம். ஆனால் இந்தப் பகுதியிலுள்ள ஏழைமக்களின் பால் நான் கொண்ட மோகத்தையோ எனது செயற்பாடுகளையோ முடக்க முடியாது. என்னுடைய புகைப்படங்களை கிழிப்பதனால் எனது பயணத்தை உங்களால் நிறுத்த முடியாது. ஏழை எளிய மக்களுக்காக பணி செய்பவன் சஜித் பிரேமதாச என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்த நாசகரமான செயலை செய்தவர்கள் இந்தப் பகுதியில்தான் இருக்கின்றார்கள். இவர்கள் கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு இடையூறாக கூலிப்படையாக செயற்பட்ட கொலைகாரக் கூட்டமாகும். இந்த கொலைகாரக்கூட்டம் அனைத்து பாகங்களிலும் காணப்படுகின்றனர்.

அவர்களால் நாசகரமான செயல்களை மாத்திரம் செய்யமுடியுமே தவிர நல்ல செயல்களை செய்ய முடியாது. எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உங்களுக்கான பலப்பரீட்சை,இந்த நாட்டை நடத்திச்செல்லக்கூடிய ஒருவரை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் உங்களை நாடிவருகின்றது. அதன் மூலம் நீங்கள் சரியான முடிவை எடுக்கும்பொழுது நாங்கள் சரியான முடிவை வழங்க இருக்கின்றோம். இப்படியான நாசகார செயல்களை செய்யும் கொலைகாரகூட்டத்திற்கு சரியான பதிலடியை தருவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி