முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு சிங்கள மக்கள் வரவேண்டுமானால் முஸ்லிம் மக்கள் கோத்தாபய ராஜபக்க்ஷவுக்கு தங்களது
ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் கடந்த நான்கரை வருடகாலமாக தமிழ், முஸ்லிம் தீவிரவாதத்திற்கு ஊக்குவிப்பு வழங்கியதன் காரணமாக சாதாரண தமிழ், முஸ்லிம் மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள விமல் வீரவங்ச, தமது வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை வாங்குவதற்கு வரும் சிங்கள மக்கள் வாழும் பாதுகாப்பான நாடு வேண்டுமாயின் அவ்வாறான நாட்டை உருவாக்குவதற்கு ஆற்றல் உள்ள கோத்தாபய ராஜபக்க்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்கு முன்வருமாறு முஸ்லிம் மக்களின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிலியந்தளை நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு விஷேட உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய விமல் வீரவங்ச மேலும் கூறியதாவது,
கடந்த நான்கரை வருட காலத்தில் இந்நாட்டில் ஏராளமான விடயங்கள் இல்லாமல் போயிருக்கின்றன. அதில் முக்கியமானதுதான் தேசிய பாதுகாப்பு இல்லாமல் போனதாகும். கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சுமார் 400 போ் உயிரிழந்தது மாத்திரமல்ல, தேசிய பாதுகாப்பு இல்லாமல் போன அச்சத்தில் கலக்கமடைந்து போன மக்கள் வாழும் நாடாகவும் இந்நாடு ஆகியிருக்கின்றது.
“யானை” மீண்டும் வந்தால் இந்நாடு மற்றொரு ஈராக்காக, லிபியாவாக ஆகிவிடும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கின்றேன். அவ்வாறான நிலையினை தடுப்பதற்கு எனில் வெற்றி கொள்ள வேண்டிய இரண்டு சவால்கள் இருக்கின்றன.
முதலாவது, “சஹ்ரான்கள்” மீண்டும் அவசர கால நிலையை ஏற்படுத்தி அமெரிக்க இராணுவத்தை இந்நாட்டிற்குள் நுழைவதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுப்பதைத் தடுப்பதாகும். இரண்டாவது, மேலே கூறப்பட்ட வகையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை பிரிந்து போவதற்கு இடமளிக்காமல் வரலாற்றில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் கோத்தாபய ராஜபக்க்ஷவை வெற்றி பெறச் செய்யும் பொறுப்பு எமக்குள்ளது என்றார்.