கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68வது மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
மற்றும் கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான குமார வெல்கம ஆகியோர் கலந்து கொள்ள வந்த போது நாட்டின் நாலாபக்கங்களிலிருந்தும் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான கட்சியின் அங்கத்தவர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று கரகோஷம் செய்து அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தமை புதிய அரசியல் போக்கின் ஆரம்பமாக இருக்கலாம் என அம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்த வேறு கட்சி ஒன்றின் தலைவர் 'theleader.lk' க்குத் தெரிவித்தார்.
மாநாடு ஆரம்பித்து சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் தனித் தனியாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா தவிற சம்மேளத்தின் அதிகூடிய கவனத்திற்குள்ளான இருவராக சந்திரிகா மற்றும் வெல்கம அமைந்திருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
கடந்த காலங்களில் தனக்கு இடம்பெற்ற அனைத்து புறக்கணிப்புக்களையும் மறந்துவிட்டு ஸ்ரீ.ல.சு.கட்சியைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி இணைந்திருப்பதோடு, ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார் என குமார வெல்கம அறிவித்துள்ளார்.
மாநாட்டில் கலந்து கொண்ட கட்சி பிரதிநிதிகளின் நிலைப்பாடு தொடர்பில் 'theleader.lk' க்கு கருத்து தெரிவித்த ஸ்ரீ.ல.சு.கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் கூறும் போது, ஜனாதிபதி பிரதமரை விமர்சித்த சந்தர்ப்பங்களிலும், தாமரை மொட்டு கட்சியினை விமர்சித்த சந்தர்ப்பங்களிலும் கூடியிருந்தோரின் பெரும்பாலானோர் அதனை அங்கீகரித்து கரசோஷம் செய்ததும், சந்திரிகா மற்றும் வெல்கம ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த போது மாநாட்டு மண்டபம் நிறைந்த கரகோஷம் எழுந்தமையும் கட்சியின் எதிர்கால அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது கண்டிப்பாக கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள் என்றார்.
நிமல் சிரிபால டி.சில்வா தாமரை மொட்டு கட்சிக்கு!
எவ்வாறாயினும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் சிரிபால டி.சில்வா அடுத்த சில தினங்களில் தாமரை மொட்டு கட்சியில் இணைந்து கொள்வற்கான இடம் உள்ளமை அவர் இம்மாநாட்டின் போது ஆற்றிய உரையிலிருந்து தெளிவாகியதாகவும் அவர் மேலும் கூறினார். தற்போதைய நிலையின் பிரகாரம் ஸ்ரீ.ல.சு.கட்சியால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும், எனினும் அரசர்களை உருவாக்குவதற்கான பலம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இந்த மாநாட்டில் ஆளும் கட்சியின் கட்சித் தலைவர்களான அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், எஸ்.பி.நாவின்ன மற்றும் கூட்டு எதிர்கட்சியின் தலைவர்களான தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.