ஜனாதிபதித் தேர்தலில்
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை தெரிவிக்கும் கடிதங்கள் கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததன் பின்னர் கட்சியின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்சியின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்க அண்மையில் பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடம் கூடியது. இக்கூட்டத்தின்போது கட்சியில் இருந்து வேட்பாளரை நியமிப்பது என்றும் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களின் அங்கத்துவத்தை இடைநிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கட்சியின் நிலைப்பாட்டை எதிர்க்கும் உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் அரசியல் பீடம் கடந்த சில வாரங்களாக கணிசமான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யுமாறு கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கோரியிருந்தனர்.
இதன்படி, கட்சியின் தீர்மானங்களை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கடிதங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.