முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ். எம். மரிக்கார் கூறுகிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அவர் விடுத்துள்ள அறிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதியுடன் கூட்டு சேர்வதற்கோ அல்லது அவ்வாறான ஆதரவைப் பெறுவதற்கோ ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமான தோல்வியை எதிர்நோக்கியுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவான பிரசாரக் குழுக்கள் பொய்யான செய்திகளை உருவாக்கி அதனை வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் வலியுறுத்துகின்றார்.
இத்தேர்தல் காலத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் சவாலாக விளங்கும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக அரசாங்கத்தின் ஊடகச் செயற்பாடுகள் மற்றும் அனைத்து வேட்பாளர்களும் டீல் அரசியலில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது