வெள்ளவத்தை மற்றும் சிலாபம்
பிரதேசங்களில் நேற்று (16) இரண்டு கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தக் கொலைகளில் ஒன்று சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
65 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் பிங்கிரிய, பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
கொலையுண்ட பெண் விலத்தவ வீதியின் ஓரத்தில் சடலமாக கிடந்ததாக அவரது மகள் வாக்குமூலமளித்துள்ளார்.
இதேவேளை, நேற்று காலை வெள்ளவத்தையிலும் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 13, ஜம்பட்டா தெருவில் வசிக்கும் 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையில், உயிரிழந்தவர் பணிபுரிந்த கடையின் உரிமையாளருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கடையின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.