1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

“இயலும் ஸ்ரீலங்கா” தேர்தல்

மேடையானது நாட்டை பிரிக்கும் இடமல்ல. மாறாக அனைவரும் ஒன்றிணைவதற்கான மேடையென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். உங்களது

அனுராதபுரம் சல்காது மைதானத்தில் இன்று (17) நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படும் தொடர் பொதுக்கூட்டத்தின் முதலாவது பேரணி அனுராதபுரத்தில் ஆரம்பமானது. கட்சி, நிற வேறுபாடுகள் இன்றி ஏராளமான மக்கள், சல்காது மைதானத்தில்  திரண்டதுடன் அவர்கள் ஜனாதிபதியை மிகவும் அன்புடன் வரவேற்றனர்.

இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள் சஜித் பிரேமதாசவோ, அனுர திஸாநாயக்கவோ, ஹர்ஷ டி சில்வாவோ, சுனில் ஹந்துன்நெத்தியோ அல்ல என்று தெரிவித்த ஜனாதிபதி, தமது அரசாங்கம் போதியளவு உரங்களை வழங்கிய போது, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமான அறுவடையை வழங்கிய விவசாயிகளே, இந்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றியதாக நினைவு கூர்ந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அனுர திஸாநாயக்கவும் இன்று மேடைகளில் மக்களின் சுமைகளைப் பற்றி பேசுவது வேடிக்கையானது எனவும், உண்மையில் மக்கள் படும் துன்பம் அவர்களுக்குத் தெரிந்திருந்தால் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று, மக்களின் பிரச்சினைகளுக்கு அன்றே தீர்வு வழங்கியிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

அன்று  கேஸ் சிலிண்டர் 6800 ரூபாவிற்கு சென்ற போது சஜித் பிரேமதாசவும் அநுர திஸாநாயக்கவும் எங்கே இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் இந்த மேடையில் வந்து அமர்ந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“கட்சிகளை உடைப்பதற்காக நாம் இன்று ஒன்று கூடவில்லை. கட்சிகள் ஒன்றுகூடி நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வந்துள்ளோம். எம்மை ஆசீர்வதிக்கவே மழையும் பெய்தது. அதனால் கட்சி பேதமின்றி சுயாதீனமாக சிலிண்டர் சின்னத்தில் போட்டிடுகிறேன். 

மற்றைய தலைவர்கள் ஓடிப்போன வேளையில், முடியும் என்று நாட்டை மீட்க வந்தவர்கள் எம்மோடு உள்ளனர். அதனால் எனது அணியில் அனைவரும் ஒன்றுபட்டு முன்னோக்கிச் சென்று எதிர்காலத்தைப் பாதுகாப்போம். என்னுடையதோ பிரதமருடையதோ எதிர்காலம் இங்கு பாதுகாக்கப்படாது. 

கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது. அன்று நாட்டில் மின்சாரம் இருக்கவில்லை, இருளில் இருந்தோம். எரிபொருள் இருக்கவில்லை, நடந்து சென்றோம். கேஸ் இருக்கவில்லை, சிலிண்டர் மட்டுமே இருந்தது, அதையும் விற்றோம். மருந்து இருக்கவில்லை, மக்கள் வீதிகளில் உயிரிழந்தனர். ஹோட்டல்கள் மூடப்பட்டன, தொழிற்சாலைகள் முடங்கின. அப்போது நானும் பிரதமரும் மட்டுமே நாட்டை ஏற்க முன்வந்தோம். 

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினர். எதிர்கட்சித் தலைவர் ஓடிவிட்டார். அனுரவைத் தேடவே முடியவில்லை. டொலரின் பெறுமதி 370 ரூபாயாக உயர்ந்தது. கேஸ் சிலிண்டர் ரூ.4900 வரை அதிகரித்தது. பெற்றோல் ஒக்டேன்-92 இன் விலை ரூ.470 வரையில் அதிகரித்தது. ஒடோ டீசல் ரூ.460 வரையில் அதிகரித்தது. மண்ணெண்ணெய் விலை ரூ.460 வரையில் அதிகரித்தது. பஸ் கட்டணமும் மின் கட்டணமும் அதிகரித்தது. மக்கள் கடுமையாகத் துன்பப்பட்டனர். அப்போது சஜித்தும், அனுரவும் எங்கு இருந்தனர்?

மக்கள் கஷ்டம் புரிந்திருந்தால் ஆட்சியை ஏற்றிருக்க வேண்டும். எதிர்கட்சி எந்த வேளையிலும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கத் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரண்டாம் எதிர்கட்சி ஏற்க வேண்டும். அவர்கள் எங்கு இருந்தனர்? கேஸ் சிலிண்டர் விலை ரூ.4900 இற்கு கூடியபோது அனுர, சஜித் எங்கு இருந்தனர்? இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்.

இன்று அனுராதபுரத்தில் ஆரம்பித்து சஜித், அனுரவிடம் இந்தக் கேள்விகளை எல்லா மேடைகளிலும் கேட்பேன். பதில் இருந்தால் கூறுங்கள், இல்லாவிட்டால் எனது மேடையில் இரு பக்கங்களில் வந்து அமருங்கள். 

அன்று உயர்வடைந்த சிலிண்டர் விலை இன்று குறைந்துள்ளது. அதனால் சிலிண்டர் சின்னத்தை ஏற்றுக்கொண்டேன். பெற்றோல் டீசல் விலைளையும் குறைத்துள்ளோம். பஸ் கட்டணமும் மின் கட்டணமும் குறைந்துள்ளன. இதனால் மட்டும் திருப்தியடைய முடியாது. இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நாட்டில் உரம் இருக்கவேயில்லை. இந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சஜித்தோ அனுரவோ ஹர்ஷவோ ஹந்துன்னெத்தியோ அன்று முன்வரவில்லை. நான் உரம் பெற்றுத் தந்தேன், நீங்கள் விளைச்சலைத் தந்தீர்கள், நாம் வெற்றி கொண்டோம்!

இதற்கு மக்களுக்கு நன்றி! நான் இந்த நாட்டை கட்டியெழுப்புவேன். VAT வரி அதிகரிக்கப்பட்டபோது மக்கள் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். கஷ்டப்பட்ட அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கினோம். அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 55 ஆயிரம் வரையில் அதிகரித்தோம். வங்குரோத்து நாட்டிலேயே அதனைச் செய்தோம். 

அஸ்வெசும வழங்கினோம், சமுர்த்தி போன்று மூன்று மடங்கு வழங்கினோம். சிரேஷ்ட பிரஜைகளுக்கு நிவாரணம் வழங்கினோம். அங்கவீனமுற்றோருக்கு நிவாரணம் வழங்கினோம். ஜனாதிபதி நிதியத்தில் புலமைப்பரிசில் வழங்கினோம். உறுமய திட்டத்தில் காணி உறுதிகள் வழங்கினோம். தற்காலிகமான உறுமய திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் தனி அதிகார சபையின் கீழ் இரு வருடங்களில் இந்தத் திட்டத்தை நடத்தி முடிப்போம், அதற்கான சட்டமும் கொண்டு வரப்படும். கொழும்பில் வீட்டு உரிமைகளை மக்களுக்கு வழங்குகிறோம்.  தோட்டப் பகுதிகளை கிராமங்களாக பிரகடனப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

உரிமைகளைப் பகிர்வதே புரட்சியாகும். 18 நாடுகள் எமக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக உதவிகளை வழங்கின. நாம் முன்னேற்றத்தை எட்டினால் சர்வதேச நாணய நிதியம் 13 பில்லியன் டொலர் நிவாரணம் வழங்குவதாகக் கூறியுள்ளது. எனவே அதற்கான வேலைத்திட்டத்தை தொடர வேண்டும். அனுரவும் சஜித்தும் அதனை மாற்றுவதாகக் கூறுகிறார்கள். அதனை மாற்றிவிட்டு மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து மின்சாரம் இன்றி இருக்க வேண்டுமா? இல்லாவிட்டால் அப்படியான பிரச்சினைகள் வரும்போது அதனைத் தீர்மானிக்க முடியாமல் ஓடி விடுவார்களா?

நான்கு வருடங்கள் தொழில் கிடைக்காத இளையோருக்கு தொழில் வழங்கும் திட்டமும் எம்மிடம் உள்ளது. அதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் ஆரம்பிக்கப்படும், தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும். ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் கலாசார முக்கோணத்தை அமைத்து தம்புள்ளை, சீகிரிய பகுதிகளில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். அதேபோல் அனுராதபுரத்தை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம். அனுராதபுரத்தை பௌத்த மத்தியஸ்தானமாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக மகா விகாரை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

நாம் முன்னேறிச் செல்வோம். உங்கள் எதிர்காலத்தை எம்மிடம் விட்டுவிடுங்கள், சிலிண்டருக்கு வாக்களியுங்கள்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

dsdeeee34

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி