தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்
கீழ் பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (25) பதவியேற்றதன் பின்னர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனத்தில் தேசிய மக்கள் சக்தியினரோ பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களோ தலையிடமாட்டார்கள் எனவும் முன்னைய ஆட்சியாளர்கள் பின்பற்றிய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பார்கள் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
எனவே பழைய கலாசாரத்தை மாற்றி புதிய கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அரசியல் ரீதியில் நட்பாக இருந்தாலும் விசேட கவனிப்பு தேவையில்லை எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு மாற்றத்தை எதிர்பார்த்தே இந்நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும், கடந்த காலங்களில் பொலிஸார் மீதான மக்களின் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாகவும் அவர் கூறினார்.
"கடந்த காலத்தின் பழைய மற்றும் தவறான நடைமுறைகளை மாற்றுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உங்களுக்கு முழு ஆதரவை வழங்குகிறோம், மேலும் பொலிஸ் அதிகாரிகள் என்ற வகையில் சுதந்திரமாகச் செயல்பட்டு சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது உங்கள் கடமையாகும் என்றார்.