முன்னாள் விளையாட்டுத்துறை
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதி மீள அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கெரம் பலகைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதே இந்த வழக்கு.
அமல் ரணராஜா, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மகேன் வீரமன் ஆகிய நீதிபதிகள் கொண்ட விசேட உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதியரசர் அமல் ரணராஜா மேன்முறையீட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றிடத்துக்கு வேறொரு நீதிபதி நியமிக்கப்படும் வரை வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவர் உத்தரவிட்டார்.