முன்னாள் ஜனாதிபதிகளின்
சிறப்புரிமைகளை குறைப்பதற்கு சட்டரீதியான தடைகள் ஏற்பட்டுள்ளன.
அந்த தடைகளை நீக்கும் வகையில், சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டியுள்ளதால், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்துக்குப் பின், அதை செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் மேடையில், முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் மற்றும் ஏனைய சலுகைகளை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் உரிய சலுகைகளைப் பெற்றுள்ளனர்.
இருப்பினும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை குறைப்பதற்கான அளவுகோல்களை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.