எதிர்வரும் பொதுத் தேர்தலில்
போட்டியிடுவதற்காக பல தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றது.
எவ்வாறாயினும், புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஐக்கிய மக்கள் சக்தியின. பங்காளிகள் என்பதுடன் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ப்பது குறித்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் பாராளுமன்றத்தில் அதிகளவான ஆசனங்களை தமக்கே சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என இக்கட்சிகள் கருதுகின்றன.