எதிர்வரும் பொதுத் தேர்தலை
இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கிடையிலான கூட்டணி தொடர்பான கலந்துரையாடல்கள் முற்றாக முறிவடைந்துள்ளன.
இவ்வாறு முறிவடைந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த அடிப்படை நிபந்தனையே காரணம் என தெரிய வருகிறது.
ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே நிபந்தனையாகும்.
பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குமிடையில் அண்மையில் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.
இரு கட்சிகளின் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் சஜித் பிரேமதாசவின் அரசியல் ஆலோசகர் லக்ஷ்மன் பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இருவருக்குமிடையில் சுமார் 8 சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆரம்ப நிலை காரணமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.