(பாறுக் ஷிஹான்)
சாய்ந்தமருதுவில் போதைப்பொருளை
தம்வசம் வைத்திருந்த நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள சந்தை தொகுதியின் மேல் மாடியில் அண்மையில் திறக்கப்பட்ட வாடகை வாகனங்களை வழங்கும் நிறுவனம் ஒன்றை நடத்தும் 43 வயதான சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(30) இரவு 15 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர்.
இதனையடுத்து மறுநாள் திங்கட்கிழமை(1) சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர் உட்பட சான்றுப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு திங்கட்கிழமை(1) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை தடுப்பக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 43 வயதுடைய நபராவார்.
குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.