இலங்கையில் இன மற்றும் மத முரண்பாடுகளை தூண்டும் வகையில், இந்தியாவின் ஒரு இந்துத்துவ கட்சியின் சக்திவாய்ந்த தலைவர் வெளியிட்ட கருத்திற்கு பிரதமரின் புதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாக உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்கள் மற்றும் இந்து தமிழ் சமூகங்கள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களில் இருந்து பிரிந்து காணப்படும் ஒரே இன மக்கள் என தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவை மீழ-ட்வீட் செய்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வதாக அமைந்துள்ளது.
”இலங்கையில், இந்து தமிழர்கள் மற்றும் சிங்கள பௌத்தர்கள் ஒரு சமூகம். இந்தியாவில் நமது அரசியலமைப்பு 25ஆவது பிரிவில் ஒரு இந்துவை முஸ்லீம் அல்லது கிறிஸ்தவர் அல்லாதவர் என்று வரையறுக்கிறது. இலங்கையின் அமைதிக்கும் அதுவே வழி. எனவே அந்த ஒற்றுமையின் அடையாளமாக நான் பிரதமர் ராஜபக்சவை கருதுகின்றேன்.” என சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ராஜபக்ச குடும்பத்தின் தனிப்பட்ட நண்பரான சுப்ரமணியம் சுவாமி, மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பிரவேசத்தின் பொன்விழாவை வாழ்த்தும் வகையில் அவர் இந்த தகவலை ட்வீட் செய்திருந்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த கருத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவரது தந்தை பிரதமராகவுள்ள அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கையானது இன, மத நல்லிணக்கத்தைப் பேணும், பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடு என ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.