தெற்காசியாவின் மிகச்சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆகின்றன.
1933-ம் ஆண்டு மு.செல்லப்பாவால் தொடங்கப்பட்டு மெதுவாக உருவாக்கப்பட்டு தெற்காசியாவின் பிரமிக்கத்தக்க நூலகமாக வளர்ந்தது. 1959-ம் ஆண்டு நூலகமானது யாழ். மாநகர மேயர் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமல்ல சமஸ்கிருதம், டச்சு,பிரஞ்சு மற்றும் லத்தீன் பாடப்புத்தகங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் உட்பட 95,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு யாழ்ப்பாண அபிவிருத்தி சபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்குச் சென்ற அமைச்சர்களான சிரில் மேத்யூ மற்றும் காமினி திசாநாயக்க ஆகியோரே பொறுப்பாளிகள்.
ஐ.தே.க.தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான அப்போதைய அரசாங்கத்தின் இளைஞர் விவகார அமைச்சராக ரணில் விக்ரமசிங்க இருந்தார். பிரதமராக சஜித் பிரேமதாசவின் தந்தை இருந்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் (TULF) யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பொலிசார் கொல்லப்பட்டதை அடுத்து பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தெற்கில் ஐ.தே.க ஆதரவாளர்களால் தொடங்கப்பட்ட மூன்று நாள் வன்முறையில் விலைமதிப்பற்ற கலாச்சார கலைப்பொருள் யாழ்ப்பாண நூலகம் எரித்து சாம்பலாக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த வேலை இந்த தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், ஐ.தே.க அமைச்சர்கள் யாழ்ப்பாண நூலகத்திற்கு அருகிலுள்ள ஓய்வு இல்லத்தில் தங்கியிருந்தனர்.
ஈழநாடு செய்தித்தாள்கள் அலுவலகம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அலுவலகம், ஒரு இந்து கோயில் மற்றும் நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் வீடுகள் தெற்கில் உள்ள குண்டர்களாலும் பாதுகாப்பு படையினராலும் அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட கொடூரத்தை நேரில் பார்த்த தாவீது அடிகளார் நெஞ்சுவலியால் துடிதுடித்து காலமானார்.
இதுவரை, இந்த குற்றங்கள் தொடர்பாக யாரும் சட்டத்தின் முன்கொண்டு வரப்படவில்லை.