எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியுடன் இணைய முடியுமா என்பது
சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டால், அடுத்த சில வாரங்களில் எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து பேசும் போதே இந்த விடயம் பற்றியும் பேசப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் இது தொடர்பான சில அறிகுறிகளை ஊடகம் ஒன்றிடம் வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் சம்பந்தப்படாமல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால், புதிய கூட்டணியை உருவாக்க உதவிகளை எதிர்பார்க்கும் கட்சி எது என தயாசிறி ஜயசேகரவிடம் கேள்வி எழுபப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள அவர், எமக்கு தேவை என்றால், மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைய முடியும். அது ஒரு மாற்று வழி. அவர்களுடன் இணைய வேண்டுமா இல்லையா என்பது எதிர்காலத்தில் தீர்மானிக்க வேண்டிய விடயம். தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும்.
இந்த ஜனாதிபதித் தேர்தல் போலவே அடுத்த பொதுத் தேர்தல் வரை இந்த இணைப்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் சகல விடயங்களையும் பார்க்கின்றோம். இதனால், எங்களது நிலைப்பாட்டை நாங்கள் கைவிடவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது இடதுசாரி அமைப்புகள், இடதுசாரி சக்திகளுடன் பிணைக்கப்பட்டது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்