ஐக்கிய தேசிய கட்சியின் மிக நீண்ட காலமாக மௌனமாக அரசியல் செய்துவிட்டேன். இனியும்
என்னால் மௌனமாக அரசியல் செய்ய முடியாது, இப்போது எனக்கான நேரமும் காலமும் வந்துவிட்டது அதற்கமைய இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியே தீருவேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச கூறுகின்றார்.
கடுவன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இந்த நாட்டில் புதிய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் எமது அரசாங்கத்தை மேலும் பலபடுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் எமக்கான அரசாங்கத்தை அமைத்து பிரதமர் -ஜனாதிபதி என நாமே ஆட்சியை நடத்தி இந்த நாட்டினை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான முயற்சிகளையே நாம் இப்போது முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை உடன் பெயரிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூல கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்தும் காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.. இவ்வாறு காலம் தாழ்த்துவதனால் நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் அது பாதக நிலைமையை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்