ஐக்கிய தேசிய கட்சி இரண்டாகப் பிளவு படுவதைத் தடுத்து அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைவருக்கான கௌரவத்தைப் பெற்றுக் கொண்டு
ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ளக் கூடிய வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை ஏற்றுக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் விடுத்துள்ள யோசனையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க முதற்தடவையாக கவனத்தைச் செலுத்தியுள்ளதாக ராவய பத்திரிகை இன்று (22) செய்தி வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் அடுத்த வாரத்தில் செயற்குழுவைக் கூட்டி வாக்கெடுப்புக்குச் செல்லாது இந்த வேட்பாளர் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொள்வார் என ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் சார்பு அமைச்சர் ஒருவர் ராவயவுக்குத் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பை ஏற்று பிரதமரும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இன்று காலை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேசிய சந்தர்ப்பத்தில் இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.