முழு முஸ்லிம் சமூகமுமே சஹ்ரான்களாகும் எனக் கூறிய கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல முஸ்லிம்
சமூகத்திடம் மாத்திரமின்றி முழு நாட்டிடத்திலும் மன்னிப்புக் கோர வேண்டும் என பிரதி அமைச்சர் நலின் பண்டார கூறினார். நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நலின் பண்டார மேலும் கூறியதாவது,
“பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அன்று சஹ்ரானுக்கு, பொட்டு அம்மானுக்கு பணம் கொடுத்ததை ஏற்றுக் கொண்டது மாத்திரமல்ல அதனைத் திரும்பத் திரும்ப கூறினார். இதனை உங்களால் அந்த வீடியோவில் பார்த்துக் கொள்ள முடியும்.
அதனை விடவும் ஆபத்தான கருத்தினை அதற்கு மறுநாள் ஏற்பாடு செய்யப்பட்ட அவர்களது ஊடக சந்திப்பின் போது அவர் கூறினார். அவர் கூறிய விடயங்களுக்காக அன்று மாலை சென்ற பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ அவரை முழந்தாளிடச் செய்து தண்டனை வழங்கினாரா என எனக்குத் தெரியாது”
முஸ்லிம் சமூகத்தையே உளவாளிகளாகப் பாவித்தார்களாம்!
இதனை சரிசெய்யச் சென்று அதனை விடவும் ஆபத்தான கதையினைக் கூறினார். அவர் அடுத்த நாள் வந்து நான் சஹ்ரான் எனக் கூறியது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையேயாகும் எனக் கூறினார். ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தைத்தானாம் அவர் சஹ்ரான்கள் எனக் கூறியது. முழு முஸ்லிம் சமூகத்தையும் உளவாளிகளாகப் பாவித்தார்களாம். அதனைவிடவும் மோசமான விடயம் இது. சஹ்ரான் என்பவன் கொடுரமான ஒரு பயங்கரவாதியாகும். அந்த தீவிரவாதியின் பெயரில் முஸ்லிம் சமூகத்தை அடையாளப்படுத்தியது எமது நாட்டில் இருக்கும் முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்துள்ளதாகவே நான் கருதுகின்றேன். இந்தக் கூற்றைக் கூறியது ஒரு சாதாரணமானவர் அல்ல. அவர் தாமரை மொட்டுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என்றார்.